Wednesday, October 3, 2018

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது எப்படி?

Posted by K Venkatesh 7288 at 11:27 PM 0 comments
பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது தான். பிற்காலத்தில் தன்னை காத்து வந்த பெற்றோர்களே
இல்லாவிட்டாலும், பணமோ பிற சொத்துக்களோ இல்லாவிட்டாலும், தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து விட்டாலும், தன்னம்பிக்கை இருந்தால் ஒரு குழந்தை மீண்டும் அனைத்தையும் பெற்று பிழைத்துக் கொள்ளும்.
அதனால் இளவயதிலேயே குழந்தையிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்க பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும்.
எல்லா குழந்தைகளுக்கும் சாதாரண வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை அறிவுத்திறன் உண்டு. சராசரியான மனிதனாக இந்த உலகில் வாழ்வதற்கும், அதற்குரிய கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குமான குறைந்தபட்ச ஐ.க்யூவினை கடவுள் எல்லா குழந்தைகளுக்கும் அளித்திருக்கிறார். அதுதவிர ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதேனும் ஒன்றிரண்டு சிறப்புத் திறமையையும் அளித்திருக்கிறார். ஒரே வகுப்பில் படிக்கும் பல குழந்தைகளில் ஒரு குழந்தை ஸ்பெல்லிங் சொல்லும் போட்டியில் தேசிய அளவில் முதலாவதாக வருவது அக்குழந்தையின் சிறப்பு ஐ.க்யூவின் காரணமாகத்தான். அச்சாதனையைக் கேள்விப்படும் பெற்றோர் ‘உன் வகுப்பில் படிக்கும் பையன் என்னவெல்லாம் செய்கிறான், நீ தண்டம்’ என்று தன் குழந்தையை திட்டுவது குழந்தையின் தன்னம்பிக்கையை உடைக்கும் சுத்தியல் அடியாகும். இதைப் போன்று தான் எல்லாப் பெற்றோர்களும் தன் குழந்தையின் வயதை ஒத்த பிற குழந்தைகளின் சாதனைகளை பேசிப் பேசி ‘நீ ஒன்றுக்கும் இலாயக்கில்லாதவன்’ என்ற முத்திரையை குழந்தையின் மனதில் குத்திவிடுகிறார்கள். பின்னால் குழந்தையே ஏதேனும் சாதிக்கலாம் என நினைத்தாலும் ‘என்னால் முடியாது, நான் எதற்கும் இலாயக்கில்லாதவன், திறமைகள் அற்றவன்’ என்ற அவநம்பிக்கை அதன் மனதில் தோன்றிவிடுகிறது. இம்மனநிலையைப் போக்கி ‘என்னாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த பின்வருவனவற்றை செய்ய வேண்டும்.
குழந்தைகளிடத்தில் எதிர்மறையாகப் பேசுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். ‘நீ இப்படித்தான் தோல்வியடைவாய் என்று எனக்கு முன்பே தெரியும்’ என்பது போன்ற பேச்சுக்களை தவிர்த்து விட்டு ‘இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்து பயிற்சி செய்தால் வெற்றி பெறுவாய்’ என்று சொல்வது நல்லது. அத்தோடு எப்படி பயிற்சி செய்ய வேண்டும், என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றெல்லாம் பெற்றோர் குழந்தைக்கு செய்து காட்டுவது மிகவும் நல்லது.
போட்டிகளில் எப்போதும் முதல் பரிசுக்கே முயற்சி செய்யாமல் மூன்றாம் பரிசுக்கு முதலில் முயற்சி செய்ய கற்றுக் கொடுங்கள். மூன்றாம் பரிசும் முக்கியத்துவம் வாய்ந்ததே என்பதையும், முழுத் தோல்வியை விட மூன்றாம் பரிசு நல்லதே என்பதையும் கூறி குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும். மூன்றாம் பரிசுக்கு முயற்சி செய்த குழந்தை ஆறுதல் பரிசு தான் பெறுகிறது என்றாலும் கூட அதையும் பாராட்டுவது, அடுத்தடுத்து முயற்சிக்க குழந்தையை ஊக்கப்படுத்தும். சிறுசிறு பரிசுகளைப் பெற்ற குழந்தையின் மனம் நாளடைவில் ‘என்னாலும் பெரிய பரிசுகளைப் பெற முடியும்’ என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளும்.
தோல்விகளும் வெற்றிகளும் நிகழ்வுகளின் இருவித பரிமானங்களே என்பதை சற்று விளக்கமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ எது நடந்தாலும் செய்யும் காரியத்தை விட்டு விடக் கூடாது, தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதே ஒருவரை திறமைசாலிகளாக மாற்றும் என்பதை எடுத்துக் காட்டுகளுடன் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட தான் தோல்வியடைந்த விசயங்களிலெல்லாம் தன் குழந்தைகளை வைத்து வெற்றியடைந்து கொள்ளும் மனப்பான்மையை பெற்றோர் விட்டுவிட வேண்டும். பெற்றோர்களின் கட்டாயங்களுக்காக ஆர்வமில்லாத விசயங்களிலெல்லாம் முயற்சித்து தோல்வியடையும் குழந்தைகளே அதிக அளவில் தன்னம்பிக்கை இல்லாமல் வளர்கின்றன. அக்குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோர்களை விட மோசமான தோல்வியாளர்களாக உருவாகின்றனர். தன்மீதான நம்பிக்கை தனக்காக செய்யும்போது தான் அதிகரிக்கும். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

குழந்தையும் பொம்மையும்

Posted by K Venkatesh 7288 at 11:22 PM 0 comments

பொம்மைகள்

குழந்தைகள் எவ்வளவு அழகு. அதைவிட அதன் குறும்புகள் கொள்ளை கொள்ளும் அழகு. குழந்தைகள் விரும்பும் பொம்மைகளோ, நாம் குழந்தையை விரும்புவதற்கு ஈடாக உள்ள பொருளாக இருக்கிறது. ஆபத்தில்லாத பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால் குழந்தையும் மகிழும். நாமும் மகிழலாம். ஆனந்தத்தை அள்ளி அளிப்பவை அந்தக் குழந்தைகள்.
குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை. என்னதான் விலையுயர்ந்த தங்க ஆபரணங்களையோ, வெள்ளிப் பாத்திரங்களையோ குழந்தையின் கையில் கொடுத்தாலும் அவர்கள் முகம் மலர்வதென்னவோ பொம்மைகளைப் பார்த்துத்தான். பிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.

முதல் மூன்று மாதங்கள்

முதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் குழந்தைக்கு விளையாட பொம்மை எதுவும் தேவையில்லை. இந்தப் பருவத்தில் பெரிய ஸ்பாஞ்ச் பொம்மையோ பிளாஸ்டிக் முயல் பொம்மையோ உங்கள் குழந்தையின் கவனத்தைக் கவருவதில்லை. இந்தப் பருவத்தில் விரும்பும் விளையாட்டுப் பொருள் அதன் பெற்றோர்கள்தான். உங்கள் கண்கள், விரல்கள், முகம், உடைகள், இவற்றையே திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து மகிழும். தன் பிஞ்சு விரல்களால் உங்கள் முகத்தை வருடி மகிழும். இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது குழந்தையைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டுவதுதான். அவ்வாறு செய்தால் குழந்தை தன் கண்களை அகல விரித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும். கிலுகிலுப்பை ஒலி கேட்டு பரவசப்படும். இந்தப் பருவத்தில் குழந்தையை பரவசப்படுத்துபவை படுக்கைக்கு அருகில் ஒட்டப்பட்ட வண்ண போஸ்டர்கள், உருண்டு செல்லக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், கிலுகிலுப்பை ஒலி, மெல்லிய இசை, தாய் பாடும் மெல்லிய தாலாட்டு.

மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை

இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு மிகவும் விரும்பி ரசித்து விளையாடும் பொருள் அதன் கை விரல்கள்தான்.
இந்தப் பருவத்தில் குழந்தை தன் கையைத் தானே திரும்பத் திரும்ப பார்க்கும். விரல்களை மூடித் திறந்து பார்க்கும். மகிழும். கையை வேகமாக அசைத்து மகிழும். சமயங்களில் முகத்தில் வேகமாக இடித்துக் கொள்ளும். விரலை வாயில் போட்டுப் பழகிக் கொள்வதும் இந்தப் பருவத்தில்தான். வாயில் விரல் வைக்க ஆரம்பித்து விடும். இந்தப் பருவத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை அருகில் கூர்மையான பொருட்களையோ விழுங்கக்கூடிய பொருட்களையோ வைக்காமல் கவனமாக இருக்கவேண்டும். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்கள். பிளாஸ்டிக் ஸ்பூன், காற்றடிக்கப்பட்ட கலர் கலராக உள்ள பந்து, காற்றடித்த வண்ண பொம்மைகள்.

ஓராண்டு வரை

இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தை தவழ ஆரம்பிப்பதுடன் சுவரை, மேஜையைப் பிடித்துக் கொண்டு நின்று பழக ஆரம்பிக்கும். மேலும் இப் பருவத்தில் குழந்தைக்கு கையும், காலும் எந்நேரமும் துறுதுறுவென இருக்கும். எதைக் கொட்டுவது, எதைக் கீழே தள்ளுவது என்று நினைத்தபடி இருக்கும். இவர்களுக்குப் பிடித்த விளையாட்டு மேஜை மேல் உள்ள பொருட்களை சிதற வைப்பதுதான்.
இந்தப் பருவத்தில் அழகாக உட்காரவும், தன்னைச் சுற்றி உள்ள பொருள்களை வேடிக்கை பார்க்கவும் பழகிக் கொள்ளும். விளையாட்டுச் சாமான்களை சேகரித்து ஒரு பெரிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு அவர்கள் கையில் கொடுத்து விட்டால் ரொம்பவும் சுவாரசியமாய் அதைக் கொட்டிக் கவிழ்ப்பது, திரும்ப எடுத்துப் போடுவது என அதிலேயே நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழும். நகரக் கூடிய சக்கரம் வைத்த பொம்மைகளை நூல்கட்டி இழுத்து விளையாடி மகிழ்வதும் இந்தப் பருவத்தில்தான். அவர்களை கவரக் கூடிய விளையாட்டுப் பொருட்கள்...
சக்கரம் பொருத்தப்பட்ட பொம்மைகள், அழுத்தினால் ஓசை தரக் கூடிய பொம்மைகள், மெத்து மெத்தென உள்ள குஷன் மெத்தைகள்.

ஒன்று முதல் இரண்டு வயது வரை

இந்தப் பருவத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல ரசனைத் தன்மை உடையவர்களாகவும், அதற்கு ஏற்றவாறு விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாட விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் அமில் பிளாக், பில்டிங் பிளாக் வைத்து விளையாட விரும்புவார்கள். இவர்களுக்கு நாய் பொம்மையோ, கரடி பொம்மையோ, சந்தோஷத்தைத் தராது. சில குழந்தைகள் டி.வி. யைக் கவனித்து இசைக்கேற்ப கை தட்டி ஆடி மகிழும்.

இப்பருவத்தில் குழந்தைகளின் ரசனையைத் தெரிந்து கொண்டு வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் அதே வேளையில், அவசியம் குழந்தைகளின் ரசனை அறிந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கித்தர வேண்டும். பொம்மைகளின் முனைகள் கூர்மையானதாக, காயப்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடாது.
 

BABIES SMILEY Template by Ipietoon Blogger Template | Gift Idea